திருப்பத்தூர் அருகே தந்தை, தாய், மகள் கழுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். மகனுக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த காகங்கரை கிராமத்தை சேர்ந்தவர் மோகன். மின் வாரியத்தில் வேலை பார்த்து வந்தார். இவரத மனைவி சின்னபாப்பா (எ) ராஜேஸ்வரி. இவர்களுக்கு சுகன்யா என்ற மகளும், தமிழரசன் என்ற மகனும் உள்ளனர். சுகன்யா பெங்களூரிலும், தமிழரசன் ஓசூரிலும் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுகன்யா, தமிழரசன் ஆகியோர் 2 நாள் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றனர். அங்கு குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருந்தனர். இன்று அதிகாலையில் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும் என நேற்று இரவு முடிவு செய்தனர். இதையடுத்து அனைவரும் சாப்பிட்டு தூங்கினர்.
இந்நிலையில் இன்று காலை மோகன் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. அவரது வீட்டின் கதவும் திறந்து கிடந்தது. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மோகன், ராஜேஸ்வரி, சுகன்யா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். தமிழரசன் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து டிஎஸ்பி பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். கொலையாளிகள், தூங்கி கொணடிருந்த சுகன்யாவின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளனர். பின்னர் மோகன், ராஜேஸ்வரி, தமிழரசன் ஆகியோரை கழுத்தை அறுத்து கொன்றனர். இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தமிழரசன், உயிருக்கு போராடி கொண்டிருந்தார் என தெரிந்தது.
இதையடுத்து போலீசார், சடலங்களை பிரேத பரிசோதனைக்காகவும், தமிழரசனை சிகிச்சைக்காவும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தமிழரசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சொத்து சம்பந்தமான விவகாரத்தில் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீவிரமாக விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment